இந்தியக் கப்பல் சுற்றுலா: உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் மோடி அரசு!
கப்பல் சுற்றுலா என்பது இயற்கை சார்ந்த பயண அனுபவத்தை தருவது மற்றும் நாட்டின் நதிகள், கடல்கள் போன்றவற்றில் பயண அனுபவத்தை வழங்குவதாகும். இயற்கையான நீர்வழிப்பாதைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கப்பல் சுற்றுலா தேசிய மற்றும் சர்வதேச போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கிறது. விருந்தோம்பல், பொழுதுபோக்கு, கலாச்சாரம் ஆகியவற்றுக்கும் அப்பால் உள்ளூர் பொருளாதாரங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
கடலோரப் பகுதிகள் மற்றும் நதிகளில் கப்பல் சுற்றுலாவுக்கு குறிப்பிடத்தக்க திறன்களை இந்தியா கொண்டுள்ளது. இதற்கு காரணம் 7500 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் நெடுகிலும் 12 பெரிய, 200 சிறிய துறைமுகங்கள் உள்ளன என்பதும், 400 நதிகளை இணைக்கும் 110 நீர்வழிப்பாதைகள் இருப்பதுமாகும். இந்தியாவில் 1300 தீவுகள் இருப்பதும் மற்றொரு காரணமாகும்.இந்தியக் கப்பல் சுற்றுலா இயக்கம் மும்பை துறைமுகத்திலிருந்து 2024 செப்டம்பர் 30 அன்று தொடங்கப்பட்டது. 2029 வாக்கில் கப்பல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 2 மடங்காக உயர்த்துவது இதன் நோக்கமாகும். 2023-2024 நிதியாண்டில் கப்பல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4.71 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய கப்பல் சுற்றுலாவை அடுத்த 10 ஆண்டுகளில் 8 மடங்கு அதிகரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 2030-க்குள் கப்பல் சுற்றுலாவில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றும் இந்திய கடல்சார் தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த 3 முக்கிய பகுதிகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கடல் மற்றும் கடலோர கப்பல் சுற்றுலா, தீவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, நதிகள் மற்றும் உள்நாட்டு கப்பல் சுற்றுலா ஆகியவை அந்த 3 பகுதிகளாகும்.
2023 ஜனவரியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த எம்.வி.கங்கா விலாஸ், நதியில் பயணிக்கும் உலகின் மிக நீளமான சுற்றுலா கப்பலாகும். இந்த கப்பலில் வாரணாசி முதல் திப்ருகர் வரை இந்தியாவின் 5 மாநிலங்கள் மற்றும் பங்களாதேஷில் உள்ள 27 நதிகள் வழியாக 3200 கிலோ மீட்டர் சொகுசு பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சிறப்புமிக்க பயணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்ததால் லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.