தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-01-20 18:00 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருநாத சுவாமிகள் கோவில் வளாகத்தில் நேற்று தூய்மை பணி மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி மத வழிபாட்டுத் தலங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணியாற்றிய பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் பா.ஜனதா களத்தில் இறங்கும். தமிழக கவர்னர் ஆர். என். ரவி குறித்து முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கவர்னர் அப்படி என்ன தரம் தாழ்ந்த வேலையை செய்தார் என்று முதலமைச்சர் குறிப்பிட வேண்டும்.


தி.மு.க என்னும் திரைப்படத்தில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கவர்னரை திட்ட வேண்டும் என்று சீன் வைத்துள்ளனர். அதனால் தற்போது விமர்சிக்கின்றனர். எந்த தவறும் செய்யாத சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் இதுதான் நடக்கும் என்று திமுக விடுக்கும் எச்சரிக்கையாக இது உள்ளது .இதுதான் மலிவான அரசியல் .கவர்னர் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு பணியாற்றுகிறார் முதலமைச்சர் அரசியல் காப்புணர்ச்சிக்காக கவர்னரை வம்புக்கிழுக்கிறார்.


தமிழகம் வரும் பிரதமர் மோடி அயோத்தி செல்வதற்கு முன்பு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் செல்கிறார். இது நமக்கு பெருமை. தமிழ் மண்ணிற்கும் கலாச்சாரத்திற்கும் பிரதமர் மோடி கௌரவம் சேர்த்துள்ளார். கோவில் இடிப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். கோவில் இடிப்பு பற்றி திமுக பேசக்கூடாது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல கோவில்களை இடித்தனர். மக்கள் எதிர்ப்பு காரணமாக அவற்றை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News