சீர்திருத்தம், செயல்திறன்,மீட்டுருவாக்கம் இதுவே தாரக மந்திரம்- பிரதமர் மோடி!

சீர்திருத்தம், செயல், மாற்றம் என்பதே தங்களது தாரக மந்திரம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் கோவில் திறப்பு தொடர்பான தீர்மானத்தின் மீது மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளது.

Update: 2024-02-12 03:32 GMT

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மக்களவையில் தங்களது பங்களிப்பை செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.


சீர்திருத்தம், செயல், மாற்றம் என்பதே தங்களது தாரக மந்திரம் என்றும் கொரோனா காலத்திலும் நாட்டின் வளர்ச்சி தடைபடவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்றை நாம் சிறப்பாக எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.


சீர்திருத்தம் செயல்பாடு மற்றும் மாற்றம் கொண்டதாக கடந்த ஐந்தாண்டுகளில் நாடு இருந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு சவாலானது என்றும் மிகப்பெரிய உச்சங்களை இந்தியா எட்டும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிட்ட பிரதமர் மோடி, 17 வது மக்களவை 97 சதவீதம் செயல்பட்டது என்றும் இதை 100% ஆக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.


அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்றும் நாட்டின் இளைஞர் சக்தி மீது தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். தேர்வு முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும். 8-வது மக்களவையில் நாடாளுமன்றத்தின் செயல் திறன் 100% இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். விண்வெளி துறையில் வல்லரசு நாடுகளுக்கே இஸ்ரோ சவால் விடுகிறது என்றும் கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் தரவுகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் கூறினார்.மேலும் கடல், விண்வெளி, சைபர் என மூன்று வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியா பயன்படுத்துகிறது என்றும் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தேவையில்லாத பழைய சட்டங்கள் நீக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.

SOURCE :Dinakaran.com

Similar News