கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
வயது மூப்பின் காரணமாக சிறுநீரக தொற்றால் அவதியடைந்து வந்த கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததால்,கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து 4 மருத்துவ அறிக்கைகளையும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இறுதியாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருடைய உடலின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவர் எவ்வாறு ஒத்துழைக்கிறார் என்பதை வைத்தே எதுவாக இருந்தாலும் கூற முடியும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சில மணி நேரத்துக்கு முன்பு காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னரும் அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவித்துள்ளது. சரியாக மாலை 6.10 மணிக்கு கருணாநிதி உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசியலின் சகாப்தம்:
கருணாநிதியின் இந்த 60 ஆண்டு கால சட்டமன்ற வரலாற்றில், உறுப்பினர், அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் என்று அவர் பல நிலைகளில் பணியாற்றியிருக்கிறார். வாய்ப்பிருந்த போதும்கூடப் பல அரசியல் தலைவர்களையும் போல எந்தக் காலகட்டத்திலும் அவர் டெல்லி நோக்கிச் செல்லவில்லை. விளைவாக, இந்திய அரசியல் வரலாற்றில் பல அரசியல் கட்சிகளுக்கே இல்லாத வரலாற்றை அவர் படைத்திருக்கிறார். உலகச் சாதனையாகக்கூட இது இருக்கக் கூடும், எந்த நாட்டில் இப்படி ஒரு தலைவர் மக்களால் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்? ஆனால், ஒரு கருணாநிதியின் தனிப்பட்ட சாதனையாக மட்டும் அல்லாமல், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பெருமிதங்களில் ஒன்றாகவும் தன் அரசியல் வாழ்வை அவர் வளர்த்தெடுத்திருக்கிறார் என்பதிலேயே அவருடைய பெருமை இருக்கிறது.