ஸ்டாலினும், திமுகவும் பிடிக்கவில்லையாம்! மீண்டும் அரசியலை விட்டு ஓடிய பழ.கருப்பையா பல படிகள் ஏறி இறங்கிய கதை!
ஸ்டாலினும், திமுகவும் பிடிக்கவில்லையாம்! மீண்டும் அரசியலை விட்டு ஓடிய பழ.கருப்பையா பல படிகள் ஏறி இறங்கிய கதை!
2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர் பழ.கருப்பையா. பின்னர் அக்கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுமறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் பழ.கருப்பையா. இந்நிலையில், தற்போது திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா விலகியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் தி.மு.க.வில் சேர்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொதுவிழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணும் அளவுக்கு என்னை வலியுறுத்து அழைத்தார்.
கலைஞர் மறைந்த அன்றே தி.மு.க.வை விட்டு வெளியேறுவது குறித்துச் சிந்தித்தேன். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக் கொண்டே போய்விட்டது.
கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலக் கட்சியை நடத்துகின்ற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை, இவையெல்லாம் என்னிடம் பெரிய மனச்சலிப்பை உண்டாக்கியிருந்தன.
இவற்றோடு பொருந்திப் போகமுடியாத நிலையில், தி.மு.க.வை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக மு.க.ஸ்டாலினைப் பார்த்து விடையும் பெற்றேன்.