ஸ்டாலினும், திமுகவும் பிடிக்கவில்லையாம்! மீண்டும் அரசியலை விட்டு ஓடிய பழ.கருப்பையா பல படிகள் ஏறி இறங்கிய கதை!

ஸ்டாலினும், திமுகவும் பிடிக்கவில்லையாம்! மீண்டும் அரசியலை விட்டு ஓடிய பழ.கருப்பையா பல படிகள் ஏறி இறங்கிய கதை!

Update: 2019-12-12 12:29 GMT


2011-ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர் பழ.கருப்பையா. பின்னர் அக்கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுமறைந்த  முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.


இதையடுத்து அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் பழ.கருப்பையா. இந்நிலையில், தற்போது திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா விலகியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் தி.மு.க.வில் சேர்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. ஒரு பொதுவிழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரோ என எண்ணும் அளவுக்கு என்னை வலியுறுத்து அழைத்தார்.


கலைஞர் மறைந்த அன்றே தி.மு.க.வை விட்டு வெளியேறுவது குறித்துச் சிந்தித்தேன். பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக் கொண்டே போய்விட்டது.


கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்குகள், ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலக் கட்சியை நடத்துகின்ற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை, இவையெல்லாம் என்னிடம் பெரிய மனச்சலிப்பை உண்டாக்கியிருந்தன.


இவற்றோடு பொருந்திப் போகமுடியாத நிலையில், தி.மு.க.வை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும், அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து விலகிக் கொள்வது என்றும் முடிவெடுத்தேன். நேரடியாக மு.க.ஸ்டாலினைப் பார்த்து விடையும் பெற்றேன்.


ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலைப் பொது வாழ்வின் அங்கமாக ஏற்பது. உட்கட்சுக்குள்ளே கூட விமர்சிக்க முடியாதவாறு கட்சி விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்க்கைக்கு ஏற்புடையவை அல்ல.


மாநிலங்களைப் பல கூறுகளாக உடைப்பது, இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது, இவையெல்லாம் மொழி வழி இன உணர்வைச் சிதைக்கின்ற போக்குகளாகும். இதிலுள்ள ஆபத்தைத் திமுக சரியாக புரிந்து கொண்டிருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒருநாள் அறிக்கைகளோடு இவையெல்லாம் முடிந்து விடுகின்றவை அல்ல.


கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது. இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்தே என்னுடைய விலகலுக்கான காரணம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பழ கருப்பையா ஏறி, இறங்கிய அரசியல் படிகள்


பழ.கருப்பையா ஆரம்பத்தில் காங்கிரசில் இருந்தார். பிறகு காமராஜர் தலைமையிலான சிண்டிகேட் கட்சிக்கு மாறினார். காமராஜர் மறைவுக்குப் பின் ஜனதா கட்சியில் இணைந்தார். ஜனதா கட்சி பிளவுபட்டபொழுது 1982ஆம் ஆண்டில் ஜனதா தள் கட்சியில் சேர்ந்தார். 1988 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். 1992ஆம் ஆண்டில் வைகோ  திமுகவிலிருந்து பிரிந்து சென்று மதிமுக தொடங்கியபொழுது அதில் இணைந்தார்.  பின்னர் ஓராண்டு கழித்து அதிலிருந்தும் விலகினார். அதன் பிறகு யாராலும் அழைக்கப்படாமல் தனியாளாக இருந்தார். அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதில் கொஞ்ச காலம் இருந்த அவர் 2010 ஆம் ஆண்டில் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர்  சோவின்  ஆலோசனைப்படி அதிமுவில் சேர்ந்தார் என கூறப்படுகிறது.


அக்கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டில் திமுகவை கடுமையாக தாக்கி பழ. கருப்பையா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி காரணமாக திமுக ஏவிய குண்டர்களால் தாக்கப்பட்டார்.


2016 ஜனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.


பின்னர் கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 சூலை 19ஆம் நாள் இணைந்தார். கடைசியாக திராடகட்சிகள் எதுவும் சரியில்லை என்று மேற்கண்ட குறைகளைக் கூறி இன்று 2019 டிசம்பர் மாதம் திமுகவில் இருந்து வெளியேறினார். 


Similar News