திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் 67 இடங்களில் 66 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடிய பா.ஜ.க - ஒட்டுமொத்தமாக தகர்த்தெறியப்பட்ட கம்யூனிஸ்ட் கோட்டை
திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் 67 இடங்களில் 66 இடங்களைக் கைப்பற்றி வாகை சூடிய பா.ஜ.க - ஒட்டுமொத்தமாக தகர்த்தெறியப்பட்ட கம்யூனிஸ்ட் கோட்டை
பா.ஜ.க ஆளும் திரிபுராவில் 7 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட 67 இடங்களுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் 66 இடங்களை கைப்பற்றி பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. குறிப்பாக அகர்தலா மாநகராட்சியில் 4 வார்டுகளை பா.ஜ.க கைப்பற்றியது.
1993-ம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டு காலம் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நிலவி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க அமைத்தக் கூட்டணி மொத்தமுள்ள 60 தொகுதியில் 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திரிபுராவின் முதல்வராக பிப்லாப் குமார் தேப் பதவி ஏற்றார். சமீபத்தில் திரிபுரா நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 67 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிய நிலையில் 67 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப், "நகர்ப்புற உள்ளாட்சிக்கான இந்த இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தந்த திரிபுரா மக்களுக்கு நன்றி. பிரதமர் மற்றும் அகில இந்திய பா.ஜ.க தலைவர் அமித் ஷா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 37 லட்சம் திரிபுரா மக்களுக்காக உழைப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/BjpBiplab/status/1078683527263195138?s=20
இதே போன்று, பா.ஜ.க.வின் வெற்றி குறித்து கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மாநில முதல்வர் உள்ளிட்டோரை அவர் பாராட்டியிருப்பதுடன், திரிபுரா வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி வழங்கி வரும் வழிகாட்டுதல் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
https://twitter.com/AmitShah/status/1078637291483082754?s=20
திரிபுரா மாநிலத்தில் ஏற்கனவே செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் பா.ஜ.க 96 சதவீத இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றது.