முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி - தி.மு.க. வின் வியூகமா? விதியா? #Udhayanithi #Dmk
முன்னிலைப்படுத்தப்படும் உதயநிதி - தி.மு.க. வின் வியூகமா? விதியா? #Udhayanithi #Dmk
திமுக என்பது கட்டமைப்புகளால் உருவானது. அறிவாலயத்தில் கலைஞரின் பேனா எழுதும் ஒவ்வோர் எழுத்தும் களப்பணியில் இருக்கும் கடைசி தொண்டனின் உயிர் மூச்சாக இருக்கும். இதுதான் அன்றைய திமுக. ஆனால் இன்றைய திமுக கட்டமைப்பை கனவிலும் கூட நினைக்குமா என தெரியவில்லை! தனி நபர்களின் ஆதிக்கம், குடும்ப உறுப்பினர்களின் பரமபத விளையாட்டு, ஒருவர் பெயர் வாங்கினால் அதை மற்றொருவர் முந்தி செல்ல நினைப்பது. இரண்டாம் கட்ட தலைவர்களை கொலு பொம்மை போல் வாய்பேசாமல் வைத்துருப்பது. சிறுபான்மையினரின் ரட்சகர் என காட்டிக்கொண்டு அவர்களை கருவேப்பிலை மாதிரி உபயோகபடுத்துவது, சினிமா'வில் வளரும் நட்சத்திரங்கள், வளர்ந்த நட்சத்திரங்கள் அனைவரையும் எம்.ஜி.யார் கோணத்தில் வைத்து பயம்கொண்டு பார்ப்பது என இழுபறி நிலையில் தான் திமுக உள்ளது. இந்த இழுபறி நிலையை மேலும் சிக்கலாக்கும் விதமாக உதயநிதியின் உதயம். இது திமுக'விற்கு வியூகமா? விதியா?
சட்டமன்ற தேர்தலில் திமுக மு.க ஸ்டாலின் மட்டும் இன்றி உதயநிதி ஸ்டாலினையும் முன்னிலைப்படுத்தியே களப்பணியாற்ற உள்ளதாகவும் இதற்கான வியூகமாகவே சமூக வலைதளங்களில் உதயநிதி அதிகம் புரமோட் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.
திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்தது முதல் உதயநிதி ஆக்டிவ் அரசியலில் செய்யும் கட்டாயத்தில் உள்ளார், ஆனால் பெரும்பாலும் இளைஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை. மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு, சமூக வலைதளங்களில் கருத்து என்று ஒரு எல்லைக்குள்ளே அவர் அரசியல் செய்து வந்தார். முதல் முறையாக சாத்தான்குளம் சம்பவத்தில் திமுக தலைமையின் நேரடி பிரதிநிதியாக அங்கு சென்று வந்தார் உதயநிதி. இதனால் தன் அத்தையாகிய கனிமொழி பெயர் வாங்கிவிட கூடாது என்ற முனைப்பு அவர் நடவடிக்கையில் தெரிந்தது.
சம்பவம் நடைபெற்ற போது ராத்திரி பகலாக அங்கு இருந்த கனிமொழி கடந்த இரண்டு நாட்களாக சாத்தான் குளம் சம்பவ விவகாரத்தில் ஒதுங்கியது போல் தெரிகிறது. போலீஸ் கைது நடவடிக்கை எடுத்த பிறகு இந்த விஷயம் வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் திடீரென ரஜினியை வஞ்சப் புகழ்ச்சி செய்து நேரடியாகவே உதயநிதி ட்வீட் செய்தார். இதற்கு முன்பு எல்லாம் ரஜினி பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்வதை உதயநிதி வாடிக்கையாக வைத்திருந்தார்.