பூனைகள், நாய்களுக்கு கொரோனா வருமா? கால்நடைத்துறை வல்லுநர்கள் விளக்கம்.
பூனைகள், நாய்களுக்கு கொரோனா வருமா? கால்நடைத்துறை வல்லுநர்கள் விளக்கம்.
உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க்சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் நடியா என்ற பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த கொரோனா நபரால் புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.. மேலும் அப்பூங்காவில் நடியாவின் சகோதரி அசூல், 2 அமுர் புலிகள், 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கும் வறட்டு இருமல் இருப்பது கண்டறியப்பட்டு அவைகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
இத்தகவல்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வினை தொடர்ந்து இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காக்களும் காப்பகங்களும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மத்திய வன உயிரியல் ஆணையம் மாநிலங்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், "சிசிடிவி மூலமாகவோ,நேரடியாகவோ விலங்குகளின் நடவடிக்கைகளில் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பாதுகாப்பு கவச உடைகள் இல்லாமல் விலங்குகளை பராமரிப்பாளர்கள் அணுகக் கூடாது.
மாமிசம் உண்ணிகள், சிங்கம்,புலி போன்ற பெரிய பூனை வகையினங்கள், மரநாய்கள், குரங்கினங்களை கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க வேண்டும்.ஏதேனும் விலங்கிற்கு அறிகுறி தென்பட்டால் 2 வாரங்களுக்கு ஒரு முறை கோவிட் 19 நோய்க்கான மாதிரிகளை அனைத்து வகையான பாதுகாப்பு வசதிகளோடு எடுத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் சோதிக்க வேண்டும். அனைத்து வன உயிரியல் பூங்காக்களும் மாநில பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.