கள் விற்பனைக்கு அனுமதி!! 6 ஆண்டுகளாக பதில் மனு இல்லை, அபராதம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்கவும் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளாக பதில் மனு தாக்கல் செய்யாததால், ஏப். 27-க்குள் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த ஆர்.ஆறுமுகம், உயர் நீதிமன்ற கிளையில் 2020-ல் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937-ல் கள் இறக்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடையால் பனை மரம் வளர்ப்போர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கள் போதைப்பொருள் அல்ல, உடலுக்கு நல்லது என்றும், வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனையை பெருக்குவதற்காகவே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்களைவிட கள்ளில் குறைவாகவே போதை உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளது. ஏப். 27-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், தவறினால் அடுத்த விசாரணையின்போது அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.