தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்!! பாஜக-வின் தேர்தல் வியூகம்!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாஜக 57 தொகுதிகளில் வெளிமாநிலப் பொறுப்பாளர்களை களமிறக்க உள்ளது. இவர்கள் வாக்குச்சாவடி வாரியாக பாஜக அணிக்கு உள்ள நிலவரம் குறித்த அம்சங்களை ஆராய்ந்து தலைமைக்கு தகவல் அனுப்ப கூறப்பட்டுள்ளது.
பாஜக-வுக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள 75 தொகுதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 75-ல், மிகவும் சாதகமான சூழல் நிலவும் 57 தொகுதிகளைத் தேர்வு செய்து, அங்கு இந்த வெளிமாநிலப் பொறுப்பாளர்கள் தேர்தல் முடியும் வரை முகாமிட்டுப் பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிமாநிலப் பொறுப்பாளர்கள், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாடுதல், கமிட்டி இல்லாத இடங்களில் புதிய அமைப்புகளை உருவாக்குதல், வாக்குச்சாவடி வாரியாக நிலவும் சாதக, பாதக அம்சங்களை ஆராய்தல், தொகுதியின் நிலவரத்தைப் பொறுத்து, மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள வேட்பாளர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பணிகளில் இறங்க உள்ளனர்.
ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனைத்து நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத் தீவிரமாக முடிக்க வேண்டும் என பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.