Kathir News
Begin typing your search above and press return to search.

தீவிர இஸ்லாமியவாத அமைப்பின் மீதான தடையை நீக்கிய பாகிஸ்தான்- 'வன்முறையைத் தடுக்கவே' என விளக்கம் !

வருங்காலத்தில் வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறையாக "பெரிய தேசிய நலன்" என்று கருதி இம்முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

தீவிர இஸ்லாமியவாத அமைப்பின் மீதான தடையை நீக்கிய பாகிஸ்தான்- வன்முறையைத் தடுக்கவே என விளக்கம் !

Saffron MomBy : Saffron Mom

  |  9 Nov 2021 11:42 AM GMT

தீவிர இஸ்லாமியவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP) மீதான தடையை பாகிஸ்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முடிவுக்குக் கொண்டு வந்தது.

இஸ்லாமாபாத்தை நோக்கி தான் நடத்தவிருந்த அணிவகுப்பை கைவிடுவதாக TLP அமைப்பிற்கும், பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டது.

வருங்காலத்தில் வன்முறையைத் தடுப்பதற்கான வழிமுறையாக "பெரிய தேசிய நலன்" என்று கருதி இம்முடிவை எடுத்திருப்பதாக பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

தெஹ்ரீக்-இ-லப்பைக் ஏன் முதலில் தடை செய்யப்பட்டது?

நபி முஹம்மதுவின் கேலிச்சித்திரங்களை, நையாண்டி பிரெஞ்சு இதழான சார்லி ஹெப்டோவில் மறுபிரசுரம் செய்ததற்கு பதிலடியாக TLP அமைப்பு பாகிஸ்தானில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதைத் தொடர்ந்து இவ்வமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் படங்களை மறுபிரசுரம் செய்ததற்கு அளித்த ஆதரவு, முஸ்லிம் உலகம் முழுவதும் பரவலான கோபத்தைத் தூண்டியது.

தெஹ்ரீக்-இ-லப்பைக் (TLP), பாகிஸ்தானில் இருந்து பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டும் எனப் போராடியது. இதற்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியில் அதை நிறைவேற்றவில்லை.

இத்தகைய போராட்டங்களை அடுத்து இவ்வமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே பாகிஸ்தானின் 2018 தேர்தலில் TLP முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக இஸ்லாத்தை அவமதிக்கும் எவருக்கும் மரண தண்டனை அளிக்கும் இறை நிந்தனை (blasphemy) சட்டத்தை பாதுகாப்பதாக சபதம் செய்தபோது அதற்கான ஆதரவு பெருகியது.

தடையை நீக்கவும் - ரிஸ்வியை விடுவிக்கவும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகமாகியது.

லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர்கள் (186 மைல்கள்) தொலைவில் "லாங் மார்ச்" (நீண்ட பேரணி) தொடங்கியபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அக்டோபர் மாத இறுதியில் போலீஸாருடன் மோதினர்.

வன்முறையில் குறைந்தது இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

தற்போது இரு தரப்பும் செய்துள்ள ஒப்பந்தத்திற்கு இணங்க, TLP அதன் அணிவகுப்பை முறையாக கைவிட வேண்டும். ஆனால் ரிஸ்வியை விடுவிப்பதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வரை பல ஆதரவாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். கடந்த வாரம், பாகிஸ்தான் அதிகாரிகள் 1,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை விடுவித்தனர்.

உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கூறுகையில், பிரான்ஸ் தூதரை வெளியேற்றும் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். எவ்வாறாயினும், அத்தகைய செயலை மேற்கொள்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது உறவை சேதப்படுத்த பாகிஸ்தானால் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


Cover Image Courtesy: Dawn

Next Story
கதிர் தொகுப்பு
Trending News