₹2 கோடி மதிப்புடைய மருத்துவ உபகரணங்களை வழங்கிய அமிதாப் பச்சன் : குவியும் பாராட்டுக்கள்!
நடிகர் அமிதாப்பச்சன் மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கியுள்ளார்.
கொரோனா துவங்கிய காலத்தில் அமிதாப்பச்சன் டெல்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா சார்பாக கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்க ரூ.2 கோடி வழங்கினார். இது தவிர கொரோனா நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள குருத்வாராக்களுக்கு ரூ.7 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
தற்போது அவர் மும்பை சயானில் உள்ள லோக்மான்ய திலக் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கியிருக்கிறார். அதிநவீன இரண்டு வென்டிலேட்டர்கள், மானிட்டர்கள் உட்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை தானமாக வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் ஜோஷி சக டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சார்பாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.