இளையராஜாவுக்கு ‘நோ’.. கறார் காட்டும் பிரசாத் ஸ்டூடியோ.!
இளையராஜாவுக்கு ‘நோ’.. கறார் காட்டும் பிரசாத் ஸ்டூடியோ.!
இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் இடையேயான மோதல் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கடந்த 40 வருடங்களாக தனது இசை பயணத்தை பிரசாத் ஸ்டூடியோவில் தொடந்து செய்து வந்தார். இதற்காக முறையாக வாடகையும் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இளையராஜாவுக்கு ஸ்டூடியோவை விட்ட எல்.வி.பிரசாத்தின் மகன் தற்போது, ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தி வருகின்றார். இந்த விவகாரத்தை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியது நீதிமன்றம். இதனையடுத்து, ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டுமானால் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அங்கிருக்கும் தனது பொருட்களையும் எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவை ஸ்டூடியோவில் அனுமதிக்க முடியாது என்றும் அவரை அனுமதித்தால் கூட்டம் கூடும் என்றும் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து இளையராஜா, வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வழக்கறிஞரை அனுமதிக்கலாம் என தெரிவித்த நீதிபதி இது குறித்து இரு தரப்பும் நாளை தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதித்தால் இழப்பீட்டை இளையராஜா வலியுறுத்தக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிற்காக பணியாற்றி வந்த இசைஞானிக்கு இது போன்ற பிரச்சனையா, இதற்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.