ஏழைகளின் வாழ்வும் மேம்பட பாடுபடும் நிலையில் எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரம் - பிரதமர் மோடி கடும் தாக்கு !

ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்டு வரும் எனக்கு கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

Update: 2023-03-14 05:30 GMT

பெங்களூரு - மைசூர் இடையே 10 வழி சாலை ரூபாய் 8,480 கோடியில் நிறுவப்பட்டுள்ளது. 118 கிலோமீட்டர் தூரத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையால் பெங்களூரு - மைசூர் இடையே பயண நேரம் மூன்று மணி நேரத்தில் இருந்து 75 நிமிடங்களாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 10 வழி சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அந்த சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் .


அதேபோல் பிரதமர் மோடி ரூபாய் 4130 கோடியில் மைசூர் - குஷால் நகர் இடையே நான்கு வழிச்சாலையில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டினார் .விழாவின் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த இரட்டை எஞ்சின் அரசு ஒவ்வொரு குடிமகனின் கோரிக்கைகளையும் விரைவான வளர்ச்சியுடன் நிறைவேற்ற பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் கர்நாடக மக்களுக்கு இரட்டை எஞ்சின் அரசின்  பரிசாகும். பெங்களூரு - மைசூர் இடையேயான இந்த விரைவு சாலையால் நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். இந்த விரைவு சாலை மைசூர் பெங்களூரு இடையிலான பயண நேரத்தை பாதியாக குறைக்கும்.


பாரத்மாலா மற்றும் சாகர்மாலா திட்டங்கள் இன்று இந்தியா மற்றும் கர்நாடகத்தின் நிலப்பரப்பை மாற்றுகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது நமது நாட்டின் உள் கட்டமைப்பு பட்ஜெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக ரூபாய் 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏழைகளின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட பயணத்தில் பெரும்பகுதி கொள்ளை அடிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களின் வலியை புரிந்து கொண்ட உணர்வுள்ள அரசு ஆட்சிக்கு வந்தது. அரசு தொடர்ந்து உழைத்து ஏழைகளுக்கு சேவை செய்ய வீடு குடிநீர் இணைப்பு ,உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்பு , மின்சாரம், சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை உறுதி செய்தது.


கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளுக்காக மூன்று கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பயிர்களின் நிச்சயமற்ற தன்மையால் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் நிலுவைத்தொகை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டால் இந்த பிரச்சனைக்கு பெரிய அளவில் தீர்வு கிடைக்கும் .இந்த பணியை நாங்கள் செய்கிறோம்.


கடந்த ஆண்டு சர்க்கரை ஆலைகள் ரூபாய் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான எத்தனாலை எண்ணெய் நிறுவனங்களுக்கு விற்று கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கின. இந்தியா வாய்ப்புகளின் பூமி என்று கூறி உலகம் முழுவதும் உள்ள மக்கள் நமது தேசத்தின் மீது தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியா சாதனை படைக்கும் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றது.


நான் ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த செயல்பட்டு வருகிறேன். ஆனால் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? எனக்கு கல்லறை தோண்ட கனவு காண்பதில் மும்முரமாக இருக்கின்றார்கள். கோடிக்கணக்கான தாய்மார்கள் சகோதரிகள் மற்றும் மகள்கள் இந்திய மக்களின் ஆசிர்வாதங்கள் எனக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது இது காங்கிரசுக்கு தெரியவில்லை இவ்வாறு மோடி பேசினார்.





 


Similar News