மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும் - ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு!
“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் நிகழ்ச்சியில் திருச்சி மேயர் திரு. அன்பழகன் அவர்கள் கூறினார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ என்ற விழாவை மண் காப்போம் இயக்கம் திருச்சியில் இன்று (ஜூலை 30) ஏற்பாடு செய்தது. எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இத்திருவிழாவில் திருச்சி மேயர் திரு. அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். மேலும், எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் இயக்குநர் திரு. மால்முருகன், நிர்வாக மேலாளர் திருமதி. ஸ்ரீதேவி ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
மேயர் அவர்கள் பேசுகையில், “விவசாயத்தை எப்படி பேணி காக்க வேண்டும், மண் வளத்தை எப்படி பேணி காக்க வேண்டும் என்று விளக்கி சொல்லும் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் மிகவும் அவசியம். இயற்கை விவசாயம் செய்து மண் வளத்தை பாதுகாத்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே விவசாயம் தான் அடிப்படை தேவையாக உள்ளது. இதை உணர்த்து வகையில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஈஷாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் திருமதி. மேனகா அவர்கள் பேசுகையில், “நான் 13 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறேன். நான் தொழில் தொடங்கும் சமயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்கள் குறித்து எவ்வித விழிப்புணர்வு இல்லை. ஆனால், இப்போது இது குறித்த விழிப்புணர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது.