புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் தகவல்
புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் சிறிய நகரங்களுக்கு விமான சேவை அளிப்பதற்காக 'உதான் திட்டம்' அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இதுவரை விமான சேவை இல்லாத சிறிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளில் 'உதான் ' திட்ட விமானங்கள் ஒரு கோடியே 15 லட்சம் பயணிகளை அழைத்துச் சென்றுள்ளன.
இந்த நிலையில் பிராந்திய வான்வழி இணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 50 விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. அத்துடன் ஹெலிகாப்டர் தளங்கள், நீர்வழி விமான நிலையங்கள், நவீன தரை இறங்கும் மைதானங்கள் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இதை அறிவித்துள்ளார்.