நாட்டுக்கெதிராக செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம் - சட்டையை சுழற்றும் மத்திய அரசு
பொய்யான செய்தி பரப்பிய ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், நாடாளுமன்றம் மற்றும் சுப்ரீம் கோர்ட் நடைமுறைகள் , அரசின் இயக்கம் உள்ளிட்டவை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக ஆறு யூடியூப் தளங்கள் மீது புகார்கள் இருந்தன.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் மேற்படி யூடியூப் சேனல்கள் பொய்யான செய்திகளை பரப்பி வந்தது தெரிய வந்தது. இந்த சேனல்கள் மொத்தமாக சுமார் 20 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளதும், இதை வெளியிட்ட வீடியோக்கள் 50 கோடிக்கு அதிகமான பார்வையை பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரசின் முக்கிய நிறுவனங்கள் தொடர்பாக பொய் தகவல்களை பரப்பி இந்த சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. முன்னதாக இதேபோன்று தவறான தகவல்களை வெளியிட்டு வந்த மூன்று சேனல்களை முடக்க கடந்த மாதமும் யூடியூப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.