பயணிகள் , சரக்கு ரயில் சேவை மூலம் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் 9,982 கோடி வருவாய் - தெற்கு ரயில்வே தகவல்

பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் சேவை மூலம் 2022- 2023 ஆம் நிதி ஆண்டுகளில் 9 ஆயிரத்து 982 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-04-04 03:00 GMT

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு ரயில்வே பயணிகளின் நண்பனாக இருப்பதால் பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதே போல அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கையாள முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்கள், விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் தெற்கு ரயில்வே பயணிகள் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாய் 6345 கோடி வருவாயை ஈட்டி உள்ளது.


கடந்த நிதியாண்டில் 3539.7 கோடி வருவாய் கிடைத்தது. இதன் மூலம் 80 சதவீதம் அதிக வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 - 2022ல் 33.96 கோடி பயணிகள் பயணம் செய்தனர். 2022 - 2023 இல் மொத்தம் 64 கோடி பயணிகள் தெற்கு ரயில்வே சேவையை பயன்படுத்தி உள்ளனர். 2022 - 2023 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் பயணிகள் பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயை தெற்கு ரயில்வே எட்டியுள்ளது.


மேலும் சரக்கு ரயில் சேவையை பொறுத்தவரை தெற்கு ரயில்வே வாரியம் நிர்ணயத்த இலக்கை விட 6 சதவீதம் அதிகமான சரக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. சரக்கு பிரிவில் இதுவரை இல்லாத வகையில் ரூபாய் 3637.86 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





 


Similar News