கொரோனாவை தடுக்க இரண்டாவது பூஸ்டர் டோஸ் அவசியம் இல்லை - வெளிவந்த புதிய தகவல்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க இரண்டாவது போஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்காக அவசியம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Update: 2023-01-04 06:00 GMT

கொரோனா முதன்முதலாக தோன்றிய சீனாவில் தற்போது அந்த தொற்று வேகம் எடுத்து வருகிறது. இதே போன்று ஜப்பான் , தென்கொரியா,  தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் தொற்று பரவல் எழுச்சி பெற்றுள்ளது. இந்த நாடுகளில் பி.எஃப்.7 உருமாறிய கொரோனா ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடிக்கி விடப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் சீனா உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வருகிற பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறுகிற நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டு சதவீத பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்கிற நோக்கத்தில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மூன்றாவது , நான்காவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்திய டாக்டர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவை கடந்த 26 ஆம் தேதி சந்தித்து சுகாதார பணியாளர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் நான்காவது டோஸ் தடுப்பூசி போட பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் நமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அவசியம் இல்லை. அதற்கான செயல் திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


இது பற்றி அந்த வட்டாரங்கள் கூறுகையில் நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் இன்னும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை எனவே இரண்டாவது பூஸ்டர் டோஸ்க்கு அவசியம் இல்லை.இது பற்றி ஆலோசனைகளும் நடைபெறவில்லை. மேலும் தற்போது பயன்படுத்தப்படுகிற தடுப்பூசிகளை கொண்டு இரண்டாவது போஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு தரவுகள் இல்லை என தெரிவித்தனர் இந்திய டாக்டர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜே.ஏ ஜெயலால் கருத்து தெரிவிக்கையில் பொது சுகாதார நிபுணர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக அளவில் வெளிப்படுகிறார்கள். இதன் விளைவாக அதிக அளவு வைரஸ் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது சுகாதார சமூகத்தினர் இடையே அதிக தொற்றுநோயை தூண்டும் அதை எதிர்த்து போராடுவதற்கு அவர்களுக்கு அந்த வைரசுக்கு எதிராக அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தி தேவை என வலியுறுத்தியது நினைவு கூரத்தக்கது.

Similar News