தேசத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எந்த யூடியூப் சேனலாக இருந்தாலும் முடக்கப்படும் - எச்சரித்த அமைச்சர் எல்.முருகன்

தேசத்திற்கு எதிரான சமூக ஊடகங்கள் ,நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் பேட்டி அளித்தார்.

Update: 2022-08-20 11:15 GMT

தேசத்துக்கு எதிராக கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்று தூத்துக்குடியில் மத்திய மந்திரி எல். முருகன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் கண்டறிந்து போற்றிவருகிறோம்.

நம் நாடு 100 ஆவது சுதந்திர தினத்தில் போற்றப்படக்கூடிய நாடாக வளர்ச்சி அடைந்த நாடாக பெருமை மிக்க நாடாக அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நாளை (அதாவது இன்று) ஒண்டிவீரன் 251 வது நினைவு தினத்தை போற்றும் விதமாகவும் அவருடைய எண்ணம், செயலை பாராட்டியும் அவருடைய செயலை அங்கீகரிக்கும் விதமாகவும் மத்திய அரசின் சார்பில் நெல்லையில் தபால் தலை வெளியிடப்படுகிறது. தபால்தலையை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றுக்கொள்கிறார்.

மேலும் அறியப்படாத போராட்ட தியாகிகள் குறித்த கண்காட்சியும் நடத்தப்படுகிறது. நம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக, இந்திய ராணுவத்துக்கு எதிராக, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .


கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளன. நேற்று 8 சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இந்த தேசத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எந்த யூடியூப் சேனல் ஆக இருந்தாலும் எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அவை தடை செய்யப்படும் அவர் கூறினார்.





 


Similar News