ஆன்லைன் சூதாட்டம் தடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதி - அண்ணாமலை கூறிய பின்னணி என்ன?
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா 2022 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் மேலும் சுப்ரீம் கோர்ட் மற்றும் பல்வேறு ஹை கோர்ட்களின் முந்தைய தீர்ப்புகளுக்கும் முரணாக உள்ளது .நாளை எதிர் தரப்பினர் இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த மசோதா நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நல்ல எண்ணத்திலேயே நாங்கள் அதில் சில உறுதியான சட்ட ரீதியான மாற்றங்களை செய்ய வலியுறுத்துகிறோம் .
இணைய வழியில் நடைபெறும் திறமை அடிப்படையிலான விளையாட்டுக்கள் மீது தடை விதிக்க மாநில சட்டமன்றத்திற்கு தகுதி, உரிமை இல்லை என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறி இருப்பதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் . ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் அவசரம் ஏதுமின்றி ஆழமாக சிந்தித்து மசோதாவை கவனமாக தயாரிக்க வேண்டும். மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கடந்த மார்ச் 21 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கையில் பந்தயம் மற்றும் சூதாட்டமானது அரசியல் சட்டப்படி மாநில அதிகார பட்டியலில் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியதையே தெரிவித்திருக்கிறார் .இதை யாரும் மறுக்கவில்லை.
ஆனால் இதே சட்டத்தின் சரத்து 34-ன் அடிப்படையில் நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா , கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த தடைச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது .இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஆன்லைன் ரம்மி திறமை சார்ந்த விளையாட்டு தானே தவிர வாய்ப்புக்கான விளையாட்டு அல்ல என்று கூறி கேரள அரசு கொண்டுவந்த தடை சட்டத்தை ரத்து செய்து கேரளா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.