விநாயகரே தமிழக அரசுக்கு நல்ல புத்தி கொடு- இந்து முன்னணியினர் வினோதமான போராட்டம்!

Breaking News.

Update: 2021-09-02 10:54 GMT

இந்த ஆண்டு திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார். மேலும் தமிழக அரசுக்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்தி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் காமராஜர் ரோட்டில் உள்ள குலாலர் விநாயகர் கோவில் முன் நடந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்றார். அப்போது இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள் தமிழக அரசைக் கண்டித்து தமிழக அரசிற்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று விநாயகரை வேண்டிக் கொண்டனர்.

இந்துக்களின் பண்டிகையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அதன் ஒரு பகுதியாக விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட அரசு தடை செய்துள்ளதாகவும் ஆனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்த உள்ளதாகவும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடந்த முறை விநாயகர் சதுர்த்தி அன்று 5 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டதாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக வைத்து வழிபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்து முன்னணியை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அரசு உடனடியாக தளர்த்தி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Source: Dinamalar

Tags:    

Similar News