இலங்கையில் இருந்து படகுமூலம் சீனர்கள் ஊடுருவலா? வேதாரண்யத்தில் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
இலங்கையில் இருந்து படகு மூலம் சீனர்கள் ஊடுருவ உள்ளதாக வந்த தகவலின் பெயரில் வேதாரண்யத்தில், கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இலங்கையிலிருந்து நான்கு சீனர்கள் தமிழகத்திற்கு கடல் மார்க்கமாக ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை மூலம் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தமிழக கடற்கரை ஓரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் வேதாரணியம் அருகே உள்ள சிறுதலைக் காடு, கோடியக்கரை, கோடியக்காடு, மணியன் தீவு, ஆறுகாட்டுத் துறைய, புஷ்பவனம், நாலு வேதபதி வானவன் மகாதேவி வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் கியூ பிரிவு போலீசார், கடலோர காவல் குழும போலீசார், சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். மேலும் யாராவது புதிய நபர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் இரவு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசரின் தீவிர சோதனையால் வேதாரண்ய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.