காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்கக் கோரிய சீனாவின் முயற்சி தோல்வி.!
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்கக் கோரிய சீனாவின் முயற்சி தோல்வி.!
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டோ அல்லது பாகிஸ்தானின் சார்பாகவோ, சீனா, காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னெடுத்துச் சென்று விசாரிக்கும் படி கூறுவதும், அதற்கு பாதுகாப்புச் சபை முடியாது என்று மறுத்து சீனாவும் பாகிஸ்தானும் மூக்குடைபடுவதும் வழக்கமாக நடந்துவரும் ஒரு செயல் ஆகிவிட்டது.
இந்த வருடம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், பாகிஸ்தான் எப்படியாவது காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று முயன்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று. சீனா, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று புதன்கிழமை இரவு கேட்டுக்கொண்டது. கூட்டம், கதவு மூடப்பட்ட முறைசாரா கூட்டமாகவும் இருக்கலாம் அல்லது திறந்த முறையான சந்திப்பு கூட்டமாக இருந்திருந்தால் நிறைய கவனங்கள் கிடைத்திருக்கும்.
ஆனால் அமெரிக்க பிரதிநிதி விரைவாக தலையிட்டு, "இத்தகைய விவாதம் தேவையா? காஷ்மீர் விவகாரம் இரு தரப்பு பிரச்சினை தானே?" என்று கேள்வி எழுப்பினார். ஜம்மு-காஷ்மீர் இருதரப்பு பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வரைக்கும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ரஷ்யாவும் கூட இதே போன்ற கருத்தை தெரிவித்ததாகவும், 1972ல் இந்திரா காந்திக்கும், ஸுலபிகர் அலி பூட்டோக்கும் இடையிலான சிம்லா ஒப்பந்தத்தை கூட ரஷ்யா எழுப்பியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், வியட்நாம், டொமினிக்கன் ரிபப்ளிக் மற்றும் சில நாடுகள் சேர்ந்து இந்திய தரப்பிற்கு ஆதரவு தெரிவித்தன.
பிரிட்டன் மீது எல்லாரது கண்களும் இருந்தன. முன்பொரு காலமாக இருந்திருந்தால், பிரிட்டன் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததாக கூறமுடியாது, இந்த பக்கமும் அந்த பக்கமும் தாவி கொண்டிருபார்கள். ஆனால் புதன்கிழமை இரவு, பிரிட்டன் தெளிவாக ஜம்மு-காஷ்மீர் இருதரப்பு பிரச்சனை என்பதை உறுதிப்படுத்தியது. கூட்டத்தின் முடிவில் அமெரிக்கர்கள், கூட்டம் எந்தவிதமான ஒரு முடிவுக்கும் வழிவகுக்காது என்று தெரிவித்தனர். இந்த கருத்தை பெரும்பாலான நாடுகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.