கொவிட் அவசரக் கடன் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் மத்தியஅரசு அதிரடி.!
கொவிட் அவசரக் கடன் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் மத்தியஅரசு அதிரடி.!
கொவிட் அவசரக் கடன் வசதி சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அல்ல, அனைத்து நிறுவனங்களுக்கும் தான் என்று மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கூறினார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியத் தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசால் முடிந்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும் என உறுதியளித்தார்."உங்கள் உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பென்றால், ஆதரவளிக்க/தலையிட அரசு உறுதிப்பூண்டுள்ளது," என்று அவர் கூறினார்.
பணப்புழக்கத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர், "பணப்புழக்கப் பிரச்சினையை நாங்கள் நியாயமாகவும், தெளிவாகவும் கையாண்டுள்ளோம். தற்போது நிச்சயமாகப் பணப்புழக்கம் உள்ளது. ஒரு வேளை இன்னும் சிக்கல்கள் இருந்தால் நாங்கள் அதை கவனிப்போம்," என்றார். நிலுவைத் தொகைகளை செலுத்திவிடுமாறு அனைத்து அரசுத் துறையும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நிர்மலா சீதாராமன், எந்தத் துறையிலாவது ஏதாவது பிரச்சினை இருந்தால் அரசு அதை கவனிக்கும் என்றார்.
புதிய முதலீடுகளுக்கு 15 சதவீதம் பெருநிறுவன வரி விகிதத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு பரிசீலிக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறினார்.
"என்ன செய்ய முடியுமென்று நாங்கள் பார்க்கிறோம். புதிய முதலீடுகளுக்கான 15 சதவீதம் பெருநிறுவன வரி விகிதத்தின் மூலம் தொழில்கள் பயனடைய வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். 31 மார்ச், 2023 என்னும் காலக்கெடுவை நீட்டிப்பதை பரிசீலிப்பதற்கான தங்கள் கோரிக்கையை நான் ஏற்கிறேன் என்று," நிர்மலா சீதாராமன் கூறினார்.