ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பு.!
ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பு.!
இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து மே 31 ஆம் தேதி வரை இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை ஏற்றிச்சென்ற 65.14 மில்லியன் டன்களுடன் ஒப்பிடும்போது 25சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை இந்திய ரயில்வே தனது தடையில்லா இருபத்து நான்கு மணி நேர (24X7) சரக்கு ரயில் சேவைகளின் மூலம் மொத்தம் 175.46 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றுள்ளது.
24.03.2020 முதல் 09.06.2020 வரை 31.90 லட்சத்திற்கும் அதிகமான வேகன்கள் விநியோகச் சங்கிலியை செயல்பட வைக்க பொருள்களை எடுத்துச் சென்றன. இவற்றில், 17.81 லட்சத்துக்கும் மேற்பட்ட வேகன்கள் உணவு தானியங்கள், உப்பு, சர்க்கரை, பால், சமையல் எண்ணெய், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள், பெட்ரோலிய பொருள்கள், நிலக்கரி, உரங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை நாடு முழுவதும் கொண்டு சென்றன. ஏப்ரல் 1, 2020 முதல் ஜூன் 9, 2020 வரை, ரயில்வே 12.56 மில்லியன் டன் உணவு தானியங்களை ஏற்றிச் சென்றது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 6.7 மில்லியன் டன்களாக இருந்தது.
இது தவிர, 22.03.2020 முதல் 09.06.2020 வரை மொத்தம் 3,861 பார்சல் ரயில்களும் இந்திய ரயில்வேயால் இயக்கப்பட்டுள்ளன, அவற்றில் 3,755 ரயில்கள் நேர அட்டவணை ரயில்கள். இந்தப் பார்சல் ரயில்களில் மொத்தம் 1,37,030 டன் சரக்கு ஏற்றப்பட்டுள்ளது. கோவிட் -19 ஐத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரடங்கின் போதும், அதற்குப் பிறகும், சிறிய பார்சல் அளவுகளில் மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை எடுத்து சென்றது மிகவும் முக்கியமானது. முக்கியமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களுக்கு விரைவான வெகுஜன போக்குவரத்துக்கு ரயில்வே பார்சல் வேன்களை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் தடையில்லா விநியோகத்தை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்வே நேர அட்டவணைப்படி பார்சல் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்குகிறது..