கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஆறு பேருக்கு டிசம்பர் ஆறாம் தேதி வரை காவல் நீட்டிப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஆறு பேருக்கு டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்ற காவல் நீட்டித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இவர்கள் கோவையில் இருந்தபடி காணொளி காட்சிமூலம் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.

Update: 2022-11-23 05:15 GMT

கோவை, உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முகமது அசாருதீன், முகம்மது தல்கா, முஹம்மது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஆறு பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் கடந்த எட்டாம் தேதி ஆஜர் படுத்தினர். ஆறு பேரையும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.


பின்னர் ஆறு பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக ஆறு பேரையும் மீண்டும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் வேண்டும். ஆனால் பாதுகாப்பு கருதியும் ஆறு பேரையும் அழைத்து வருவதில் அதிக நேரம் விரயம் ஆவதாலும் கோவை சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் 6 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இதை அடுத்து நேற்று மாலை ஆறு பேரையும் கோவை சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்பு என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 6 பேருக்கும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.


இவர்கள் ஆறு பேரையும் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கோவையிலிருந்து நேரில் அழைத்து வர என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.





 


Similar News