தி.மு.க ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் : தமிழிசை சௌந்தர்ராஜன்

தி.மு.க ஆட்சிக்கு வந்த மாதத்தில் இருந்து கணக்கிட்டு மகளிர் உரிமை தொகையை வழங்க வேண்டும் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-07-16 07:15 GMT

சென்னை ஜிம்கானா கிளப் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-


பண மதிப்பிழப்பின்போது காமராஜர் இருந்திருந்தால் என்னை பாராட்டி இருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருந்தார். அந்த அளவுக்கு காமராஜர் மீது பற்றுதல் கொண்டவர் பிரதமர். காமராஜர் கல்வி தந்ததால் தான் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழ் மொழியின் சிறப்பை பிரான்சில் சென்று பிரதமர் பேசியிருக்கிறார். ஏழடி திருவள்ளுவர் சிலை பிரான்சில் நிறுவப்பட இருக்கிறது.


பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கிறோம் என்று பிரதமர் சொல்கிறார். ஆனால் இங்கு தமிழுக்காக தான் வாழ்கிறோம் என்று சொல்லுகின்ற ஒரு அரசியல்வாதி கூட பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை .அப்படி என்றால் தமிழை இவர்கள் அரசியலுக்கும் ஆதாயத்திற்காகவும் தான் பயன்படுத்துகிறார்கள் .15 லட்சம் கொடுப்பேன் என்று சொல்லவில்லை.


கருப்பு பணத்தை மீட்டால் ஒவ்வொரு குடும்பமும் 15 லட்சம் பெறுகின்ற அளவுக்கு வளர்ச்சியை கொண்டு வர முடியும் என்றுதான் பிரதமர் கூறினார். அந்த வளர்ச்சியை நாடு இப்போது அடைந்திருக்கிறது. வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரூபாய் ஆயிரம் கொடுப்பதாக கூறி தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. மகளிருக்கான உரிமைத் தொகை 1000 ரூபாய் ஆட்சிக்கு வந்த நாள் முதல் கணக்கிட்டு சேர்த்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News