ஊழலுக்கு எதிராக போராடுவதும் சீர்திருத்தத்தோடு கூடிய மாற்றமும் தான் எனது தாரக மந்திரம் : பிரதமர் மோடி

ஊழலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடுவேன். சீர்திருத்தம் செயல்பாடு மாற்றம் ஆகியவை எனது தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி செங்கோட்டையில் உரையாற்றியுள்ளார்.

Update: 2023-08-16 04:15 GMT

நாட்டின் சுதந்திர தினம் வழக்கமாக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. வழக்கம் போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார்ர நிகழ்ச்சியை காண 2000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் .செங்கோட்டை பகுதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஜி-20 மாநாட்டின் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-


140 கோடி மக்களையும் எனது குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறேன். நான் உங்களிடமிருந்து வந்தவன் உங்களை நேசிக்கிறேன். கனவு கண்டால் கூட உங்களுக்காக கனவு காண்கிறேன். உங்களுக்காக கடினமாக உழைக்கிறேன். நீங்கள் எனக்கு பொறுப்பு அளித்ததால் மட்டுமே இதை செய்யவில்லை. நீங்கள் எனது குடும்பம் என்பதால் செய்கிறேன். உங்கள் வேதனையை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. உங்கள் கனவுகள் நசுக்கப்படுவது அனுமதிக்க முடியாது.


நான் மாற்றம் அளிப்பதாக கொடுத்த வாக்குறுதியின் பெயரில் 2014 ஆம் ஆண்டு என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தீர்கள். அந்த வாக்குறுதி நம்பிக்கையாக மாறியதால் 2019 ஆம் ஆண்டு என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவைதான் எனது தாரக மந்திரம். இவற்றால் இந்தியாவின் மாற்றம் உண்டானது.


இந்தியா வளர்ந்த நாடாக நேர்மை, வழிபடுதன்மை ,பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அடுத்த ஐந்தாண்டுகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சிக்கான காலம். அவை நிச்சயம் பொற்காலமாக கருதப்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா எட்டி பிடிக்கும.  இது மோடியின் உத்தரவாதம். ஊழல், வாரிசு அரசியல், சந்தர்ப்பவாதம் ஆகியவை நாட்டுக்கு பெரும் தீமைகளாக உள்ளன. அவற்றிற்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். வளர்ந்த நாட்டை உருவாக்கும் கனவு நனவாக வேண்டுமானால் ஊழல் எந்த வடிவில் வந்தாலும் சகித்துக் கொள்ளக் கூடாது.


கரையான் போல நமது அமைப்பை ஊழல் அரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக போராடுவது எனது வாழ்நாள் உறுதிப்பாடு. வாரிசு அரசியல் மக்களின் உரிமைகளை பறித்து விட்டது. சந்தர்ப்பவாதம், சமூக நீதிக்கு பெரும் தீங்கு விளைவித்துள்ளது. இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. 2047-ஆம் ஆண்டுக்குள் மக்களின் வலிமையால் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட உலகத்துக்கு இந்தியா வழிகாட்டியாக இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News