அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக ஒரே விதமான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு!

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக அனைத்து கோவில்களுக்கும் ஒரே விதமான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.

Update: 2023-03-12 00:30 GMT

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அறநிலையத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில் மாவட்ட அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அறங்காவலர் பதவிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தில் அரசியல் பின்புலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மர் ,  'அறங்காவலர் பதவிக்கு அறநிலையத்துறை இரண்டு விதமான படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. ஒரு கோவிலுக்கு ஒரு வகையான படிவத்தை வடிவமைத்துள்ளனர் .அதில் அரசியல் பின்புலம் தொடர்பான கேள்வி இடம் பெறவில்லை. மற்றொரு படிவத்தில் இந்த கேள்வி இடம் பெற்றுள்ளது. அறங்காவலர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தில் அரசியல் பின்புலம் கேள்வி இல்லாத படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கின்றனர்' என்று கூறினார்.

அதை அடுத்து நீதிபதிகள்,  இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பழைய விண்ணப்ப படிவத்தை உடனே நீக்க வேண்டும் அனைத்து கோவில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் அரசியல் பின்புலம் கேள்வி இடம் பெற்றிருக்க வேண்டும் இந்த பணியை இன்றைக்குள் அறநிலையத்துறை செய்து முடிக்க வேண்டும் விசாரணையை 17ஆம் தேதி தள்ளி வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.



 




Similar News