'இந்து மத சம்பிரதாயங்களில் அரசு தலையிட உரிமை இல்லை' - போராட்டத்தில் குதித்த தருமபுர சுற்றுவட்டார கிராம மக்கள்
தருமபுர ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ததை கண்டித்து தருமபுரம் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுர ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியை தமிழக அரசு தடை செய்ததை கண்டித்து தருமபுரம் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது, ஆதீனத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் நடைபெறும் குரு பூஜையின்போது ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர வைத்து நான்கு வீதிகளில் ஆதீனத்தில் கூட்ட அடியவர்கள், சிஷ்யர்கள் சுமந்து அருளாசி வழங்குவது பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் வழக்கமாகும்.
இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என திராவிடர் கழகத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி ஆதீனத்தில் நடைபெற தடை செய்ய வேண்டும் என திராவிடர் கழகம் கூறியதை தொடர்ந்து கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுற்றுப்புற கிராமப்புற மக்கள் மூங்கில் தோட்டம், மூளைப்பாக்கம், கீழ நாஞ்சில் நாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆதீனத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியை தடை செய்யக்கூடாது என்றும் தடை உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் தருமபுர ஆதீன மடாலயம் முகப்பில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து மதம் சார்ந்த சம்பிரதாயங்களில் அரசு தலையிடக் கூடாது என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.