உள்துறை செயலாளர், டி.ஜி.பி நேரில் ஆஜராக வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் வழக்கு தொடர்பாக ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழத்திற்கு உள்துறை செயலாளர் , டி.ஜி.பி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஹைகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம், விஜய தசமி , முக்கிய தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி பல்வேறு தினங்களில் மாநிலத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி வழங்காதுதால் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ். எஸ் நிர்வாகிகள் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த உத்தரவின் படி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை அடுத்து சென்னை ஐகோர்டில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் , டி.ஜி.பி , உள்ளீட்டு அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் தொடர்ந்தனர். அதில் உள்துறை செயலாளர் அமுதா, டி.ஜி.பி சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் , கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட கோர்ட் அவமதிப்பு வழக்குகள் மட்டும் முதல் கட்டமாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்தவக்கில் ராஜகோபாலன், வக்கீல் ரபு மனோகரன் ஆகியோர், போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் முனியப்ப ராஜ் ஆஜராகி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த இந்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது என்று வாதிட்டார். இதை அடுத்து நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்க உத்தரவிட்டும் போலீசார் அனுமதி அளிக்காதது அரசு நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது. ஐகோர்ட் என்னதான் உத்தரவு பிறப்பித்தாலும் அதற்கு மதிப்பளிக்க போலீசார் விரும்பவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார்.