ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு- எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்
ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து உடல் நம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர் .
வயிற்று வலி ,தலைவலி ,வாந்தி, மூச்சு விடுதல் சிரமம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட டஜன் கணக்கான மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் மாணவிகளின் உடலில் நஞ்சு இருந்தது தெரிந்தது. இது அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கடந்த மாத இறுதியில் இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத்துறை துணை மந்திரி யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் .
மாணவிகள் கல்வி பயில்வதை தடுப்பதற்காக மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்து வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. மேலும் இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஈரானில் 10 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரான உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பெற்றோர்களும் பொதுமக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு டெஹ்ரானில் உள்ள கல்வி அமைச்சகம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பழமை வாதிகள் மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.