பெண்கள் மீதான மரியாதையை அதிகரித்தால் தான் இந்தியா முன்னேறும் - பிரதமர் மோடி பேச்சு

பெண்கள் மீதான மரியாதையை அதிகரிப்பதன் மூலம் தான் இந்தியா முன்னேற முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2023-03-11 06:15 GMT

பிரதமர் மோடி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக துறைவாரியாக இணைய வழி கலந்துரையாடல் கூட்டங்களில் பேசி வருகிறார். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் தொடர்பாக நேற்று இணைய வழி கூட்டத்தில் அவர் பேசியதாவது:-


மத்திய அரசின் 'முத்ரா ' திட்ட கடன்களை பெற்றவர்களில் 70% பேர் பெண்கள் ஆவர். அவர்கள் தங்கள் குடும்பத்துக்கான வருவாயை பெருக்குவதுடன் மட்டுமின்றி நாட்டுக்கான புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி வருகிறார்கள். பெண்கள் மீதான மரியாதையின் அளவை அதிகரிப்பதன் மூலம் சமத்துவ உணர்வை அளிப்பதன் மூலமும் தான் இந்தியா முன்னேறிச் செல்ல முடியும். கடந்த 9 ஆண்டுகளில் பெண்கள் மேம்பாடு என்பது பெண்கள் தலைமையிலான மேம்பாடாக வளர்ந்துள்ளது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது கண் எதிரில் தெரிகிறது . பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்படைக்கப்பட்ட மூன்று கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இதன் மூலம் அவர்களுக்கு சொத்து கிடைத்துள்ளது. தீர்மானிக்கும் திறன், மன உறுதி, சிந்தனை திறன் ,இலக்கை எட்ட பாடுபடும் திறன் போன்றவை பெண் சக்தியின் வலிமைகள் . இவை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு வகிக்கின்றன. இன்று பெண்களுக்கு அதிகாரம் அளித்ததால் சமூக வாழ்க்கையில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.


மருத்துவம், விளையாட்டு , வர்த்தகம் அரசியல் போன்ற துறைகளில் பெண்களின் பங்கு அதிகரித்ததுடன் அவர்கள் முன்னால் நின்று பணியாற்றுகிறார்கள் .'ஸ்வாநிதி' திட்டத்தில் பெண்களுக்கு பிணையின்றி கடன் வழங்கப்படுகிறது. மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் பெண்களுக்கு  7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களில் 7 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்துள்ளனர் . அவர்கள் ருபாய் 6 லட்சத்து 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன்களை பெற்றுள்ளனர். அவர்கள் சிறு தொழில் முனைவராக  உருமாறி உள்ளனர்.


தேச பாதுகாப்பு பணியிலும் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.' ரபேல்' விமானத்தை ஓட்டுகிறார்கள். சட்டசபைக்கு முதல் முறையாக இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஒருவர் மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் முட்டுக்கட்டைகளை அகற்ற நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் பெண்கள் முகத்தில் புன்னகையை வரவழைக்கக் கூடிய ஒரு மாற்றத்தை யாவது நீங்கள் ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.



 


Similar News