கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்க மீனவர்கள் ஒப்புதல் வேண்டும் - மத்திய அரசு நிபந்தனை
கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டம் தொடர்பாக,மீனவர்கள் கருத்தை கேட்டு சுற்றுச்சூழல் தாக்க இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா என்ற நினைவுச் சின்னம் ஒன்றை கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அமைப்பதற்கான முன்மொழிவை மதிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகம் பரிசீலித்தது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான மதிப்பீட்டு நிபுணர் குழு பரிசீலனை செய்தது. அந்த நினைவுச் சின்னம் அமையவிருக்கும் இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகையின் கோணம் ஆராயப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் மொத்தம் 8,551.13 சதுர மீட்டர் பரப்பளவில் 81 கோடி செலவில் நிறுவப்படுகிறது.
அதில் பேனாவுக்கான நிலை மேடை 2263.08 சதுர மீட்டர் பரப்பளவிலும் நினைவு சின்னத்திற்கு செல்வதற்கான கடலுக்கு மேல் அமைக்கப்படும் நடைபாதை 2073.01 சதுர மீட்டர் பரப்பளவிலும் கடல் மற்றும் நிலத்தின் மேல் அமைக்கப்படும் வலைப்பாலம் 1856 சதுர மீட்டர் பரப்பளவிலும் கடற்கரையில் அமைக்கப்படும் நடைபாதை 1610.60 சதுர மீட்டர் பரப்பளவிலும் நினைவு சின்னத்திலிருந்து பாலத்திற்கு செல்லும் நடைபாதை 748.44 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட வேண்டும். இதற்காக கடலில் ஆறு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும்.அதுபோல கடல் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்திற்கு மேல் வைத்து நம் அமைய வேண்டும் கடற்கரையில் இருந்து 360 மீட்டர் தூரத்தில் அமைய இருக்கும் பேனா நினைவு சின்னத்தின் உயரம் 42 மீட்டர் ஆகும்.அதைச் சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட உள்ளது.மேலும் தரைப்பகுதியில் 290 மீட்டர் நீளத்திலும், கடலுக்குமேல் 6 மீட்டர் உயரத்தில் 360 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்படும். ஆக மொத்தம் 650 மீட்டர் நீளம் கொண்ட அந்த பாலத்தின் அகலம் ஏழு மீட்டர் ஆகும். அதில் மூன்று மீட்டர் கண்ணாடியாலான தளமாகும் .
இந்த நினைவு சின்னத்தை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரை வழங்கி உள்ளது.அதில் மதிப்பெண் நிபுணர் குழுவும் சில கருத்துக்களை வழங்கி இருந்தது. தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ள பரிந்துரைகளின் படியும் மாநில அரசு சமர்ப்பித்துள்ள கருத்துக்களின் படியும், மதிப்பீட்டு நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலும் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்ட ஆய்வை மேற்கொள்வதற்கான நிபந்தனைகளை மத்திய அரசு வழங்குகிறது. அதில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கையை மாநிலம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும்.