சிலை திருட்டு கும்பலை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் !

இளந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் பழமையான சிலை ஒன்றை விற்பதற்கு பேரம் பேசி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2021-08-15 10:13 GMT

செங்கல்பட்டில் 200 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக சிலை திருடப்பட்டதை தொடர்ந்து அதனை தற்போது காவல்துறையினர் மீட்டு உள்ளனர். இந்த சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மே மாதம் 28ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள இளந்தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலில் இரண்டு அடி உயரமுள்ள பஞ்சலோக சிலை திருட்டு போனதாக கோவில் நிர்வாகம் சார்பாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் காணாமல் போன சிலையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இளந்தோப்பு பகுதியில் இளைஞர்கள் சிலர் பழமையான சிலை ஒன்றை விற்பதற்கு பேரம் பேசி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்ட பொது அவர்கள் சிலையை திருடியது தெரியவந்தது. சம்பவத்தன்று மூவரும் குடி போதையில் விநாயகர் கோவிலில் இருந்த பஞ்சலோக விநாயகர் சிலையை திருடிச் சென்று பின்னர் அதனை அருகே இருந்த மல்ரோசபுரம் ஏரியில் புதைத்து வைத்தது தெரியவந்தது. பின்னர் அந்த சிலையை 5 லட்சத்திற்கு விற்க முயற்சி செய்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த சிலை கடத்தல் பின்னணியில் இவர்கள் 3 பேர் மட்டும் உள்ளனரா அல்லது இவர்களுக்கும் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Source : Dinamani 

Image courtesy : Dinamani

Tags:    

Similar News