சமையல் வேலை செய்பவருக்கு ஆவாஸ் யோஜனாவில் கிடைத்த வீடு - பிரதமர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ஏழைகளுக்கான வீடு திட்டத்தில் பலனடைந்த மதுரை பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டி உள்ள பிரதமர் மோடி இந்த திட்டம் எண்ணற்றோரின் வாழ்க்கையை மாற்றி இருப்பதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

Update: 2023-04-13 06:45 GMT

வீடில்லா ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தை 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' என்ற திட்டத்தின் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இலட்சக்கணக்கான வீடில்லாதோர் பலனடைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணும் இந்த திட்டத்தின் மூலம் வீடு பெற்றுள்ளார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டிய அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


சுப்புலட்சுமி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவனின் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார். சி .ஆர் .கேசவன் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது சுப்புலட்சுமி எழுதிய கடிதத்தை பிரதமர் மோடியிடம் சி.ஆர் .கேசவன் வழங்கினார். இதை பார்த்து பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-


இன்று நான் சி.ஆர்.கேசவனை சந்தித்தேன். அவர் தனது வீட்டில் சமையல் பணி செய்யும் சுப்பலட்சுமி எழுதிய மனதை தொடும் கடிதம் ஒன்றை என்னிடம் வழங்கினார் .மதுரை யைச்சேர்ந்த சுப்புலட்சுமி நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டு உள்ளார். எனவே 'பிரதமர் ஆவாஸ் யோஜனா' திட்டத்தில் வீடு பெறுவதற்காக வெற்றிகரமாக விண்ணப்பித்து பயனடைந்துள்ளார் .


சுப்புலட்சுமி தனது கடிதத்தில் இந்த வீடு தனக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதையும் இது தனது வாழ்க்கையில் மரியாதை மற்றும் கண்ணியத்தையும் தருகிறது என்பதையும் பகிர்ந்துள்ளார். அவர் தனது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனது நன்றியையும் ஆசிகளையும் தெரிவித்தார். இது போன்ற ஆசிர்வாதங்களே பெரும் பலம்.


அவரைப் போல எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை இந்த திட்டத்தால் மாறி உள்ளது .ஒரு வீடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு தரமான வேறுபாட்டை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் முன்னணியில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

 


Similar News