பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறிய ராஜபக்சே: மருத்துவ உதவி என சொல்லி வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டம்?

Update: 2022-05-10 08:39 GMT

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் அதிகாரப்பூர்வ பிரதமர் மாளிகையிலிருந்து வெளியேறிய ராஜபக்சே, வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதே போன்று நேற்று திடீரென்று மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் போராட்டக் களம் அப்படியே கலவரமாக மாறியது. இதனால் அமைச்சர் வீடு, பிரதமர் ராஜபக்சே வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் கொழுந்து விட்டு எரியத்தொடங்கியுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் தீவிரமடையும் சூழலில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவ பாதுகாப்புடன் வெளியேறி பாதுகாப்பான வீட்டில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இலங்கையில் கலவரம் தீவிரமடைந்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் ராஜபக்சே மருத்துவ உதவி என்று சொல்லி நாட்டை விட்டு தப்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் எதாவது ஒரு நாட்டில் தஞ்சமடையலாம் என கூறப்படுகிறது.

Source: Vikatan

Image Courtesy: Free Press Journal

Tags:    

Similar News