மார்கழியில் காட்சி தரும் மரகதலிங்கம்-தோன்றிய வரலாறு

பொதுவாக எல்லா சிவ ஆலயங்களிலும் மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் மரகதலிங்க வழிபாடு நடைபெறும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அர்த்தநாரீஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகதலிங்கம் உள்ளது.

Update: 2022-12-13 05:30 GMT

பிருங்கி முனிவர் கைலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வணங்கிவிட்டு அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடுவதை தவிர்த்து வந்தார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில் சிவனை மட்டும் வணங்கும் வகையில் வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம் அடைந்த பார்வதி "முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்" என சாபமிட்டார்.


இதை அறிந்த சிவன் நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைக்கு வந்து தான் தவம் புரிந்தார். அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது அவர் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார். பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலவருக்கு முன்னால் இந்த மரகதலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் பற்றிய அறிந்த பிருங்கி முனிவர் தன் சக்தியை இழந்து ஈசன் அளித்த ஊன்றுகோலுடன் திருச்செங்கோடு மலைக்கு வந்து மரகத லிங்கத்தை தரிசனம் செய்தார்.


இதன் பயனாக இழந்த சக்தியை அவர் மீண்டும் பெற்றார். பின் அந்த மரகதலிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயம் ஆவதற்குள் பேழையில் வைத்து விட வேண்டும், மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார். அதனால் மரகதலிங்க வழிபாடு எப்பொழுதுமே மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் மட்டுமே நடைபெறுகிறது.

Similar News