அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடியில் இறங்கும் அமலாக்கத்துறை!
அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூபாய் 42 கோடி நிரந்தர வைப்பு தொகை முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் டாக்டர் கௌதம சிகாமணி எம்பி ஆகியோர் தொடர்புடைய வீடு உள்ளிட்ட ஏழு இடங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அதிகார பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கவுதம சிகாமணி எம்.பி ஆகியோரோடு தொடர்புடைய ஏழு இடங்களில் 17-ஆம் தேதி அன்று சோதனை நடத்தப்பட்டது. பொன்முடி கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது செம்மண் குவாரி உரிமம் அவருடைய மகன் உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வழங்கியது தெரிய வருகிறது.
சட்ட விரோத குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகள் பேரிலான வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்தோனேஷியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக அனுப்பப்பட்ட பணம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தோனேஷியா நிறுவனம் ரூபாய் 41. 57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு பின்னர் 2022 ஆம் ஆண்டு ரூபாய் 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வெளிநாட்டு முதலீடுகள் நடைபெற்ற சமயத்தில் அதிக மதிப்பிலான பணம் ஹவாலா பணமாக மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறது. பொன்முடி இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் ரூபாய் 81.7 லட்சம் கணக்கில் வராத ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு பொன் முடியின் இல்லத்தில் முறையான விளக்கம் அளிக்கப்படாத ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையை திசை திருப்பும் விதமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்தது அமலாக்கத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டிருக்கிறது.