ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

ஒடிசாவின் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-19 03:30 GMT

அதிவேக  வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் ஒடிசாவின் புரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு இடையே வந்தே பாரத் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது . ஒடிசாவின் முதலாவது வந்தே பாரத் ரெயிலான இந்த சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்காக புரியில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பங்கேற்றவர் புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-


ஒடிசாவில் இன்று தொடங்கப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புவி மற்றும் ஹவுரா இடையேயான மதம் ஆன்மீகம், கலாச்சார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். இந்த ரயிலுடன் மொத்தம் 15 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் தற்போது இயக்கப்படுகின்றன. இது நாட்டின் இணைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிக்கின்றது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  வந்தே பாரத் ரயில் ஓடும்போதெல்லாம் இந்தியாவின் வேகமும் முன்னேற்றமும் தெரியும். இது பயணிகளுக்கான பயண அனுபவத்துடன் வளர்ச்சியின் அர்த்தத்தையும் முற்றிலும் மாற்றிவிடும்.


புதிய தொழில்நுட்பங்களும் வசதிகளும் டெல்லி அல்லது பெருநகரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு காலம் இருந்தது .ஆனால் தற்போது இந்தியா ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த புதிய இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டு வருகிறது . இந்த தொழில்நுட்பங்கள் நாட்டில் அனைத்து மொழிகளுக்கும் சென்று சேருகிறது. நாடு தனது சுதந்திரத்தின் அமிர்த காலத்தை கொண்டாடும் வேளையில் அதன் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் இது.


இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த அளவுக்கு வலுப்பெறுகிறதோ அந்த அளவுக்கு அதன் கூட்டுத்திறன் அதிகரிக்கும். மிகவும் சவாலான நேரங்களில் கூட இந்தியா தனது வளர்ச்சி பயணத்தை அப்படியே தொடர்ந்தது. இதற்கு காரணம் அனைத்து மாநிலங்களின் பங்கேற்பும் கூட்டாக முன்னேறும் இந்தியாவின் மனப்பான்மையும்தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Similar News