மக்கள் நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் 'மண் காப்போம்' இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ வேண்டுகோள்
“மக்கள் நோய், நொடி இன்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்” என ‘மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ திரு. ரவி வேண்டுகோள் விடுத்தார்.
"மக்கள் நோய், நொடி இன்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்" என 'மண் காப்போம்' இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ திரு. ரவி வேண்டுகோள் விடுத்தார்.
ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் அரக்கோணத்தில் உள்ள கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (அக்.16) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரக்கோணம் எம்.எல்.ஏ திரு. ரவி அவர்கள் விவசாயிகள் மத்தியில் பேசுகையில், "ஆரம்பத்தில் நாம் அனைவரும் இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டு இருந்தோம். இடையில் விளைச்சலை அதிகரிப்பதற்காக ரசாயன விவசாயத்திற்கு மாறியுள்ளோம். தற்போது மீண்டும் பழைய படி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காரணம், ரசாயன உரங்களின் பயன்பாட்டில் தான் B.P, சுகர் போன்ற நோய்கள் வருகின்றன. எனவே, இது போன்ற நோய், நொடிகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். அந்த வகையில், அரக்கோணத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்தரங்கை நடத்தும் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
இக்கருத்தரங்கில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் பங்கேற்று தங்களின் வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அதன்படி, 'மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல்' என்ற தலைப்பில் பேசிய செய்யூர் விவசாயி திரு.பாலாஜி, "இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் வெறும் உற்பத்தி செய்வதோடு நின்றுவிடாமல், அதை மதிப்பு கூட்டி நேரடியாக விற்பனை செய்யும் போது இரு மடங்கு லாபம் எடுக்க முடியும். உதாரணத்திற்கு, தக்காளி, வெங்காயம், முருங்கை போன்றவற்றை பொடியாக மாற்றி விற்பனை செய்யலாம். பீட்ரூட், கேரட்டை மால்டாக மாற்றி விற்கலாம். இதனால், காய்கறிகள் அழுகிவிடும் என்ற பயத்தில் உடனே விற்காமல் கூடுதல் நாட்கள் வைத்திருந்து விற்க முடியும். சிறு விவசாயிகளும் இதை செய்ய முடியும். பெரிய இயந்திரங்கள் எல்லாம் தேவை இல்லை. வெறும் வீட்டில் இருக்கும் மிக்சி, கிரைண்டரே போதுமானது" என்றார்.