டெல்லி பல்கலைக்கழக விழாவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம்- விழாவில் பிரதமர் கூறியது என்ன?

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் சென்றார்.

Update: 2023-07-01 06:30 GMT

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க அவர் மெட்ரோ ரயில் சென்றார். மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் அமர்ந்து உரையாடியபடி அவர் சென்ற புகைப்படங்கள் வெளியாகின. பல்கலைக்கழக வளாகத்தில் கணினி மையத்திற்கும் மேலும் இரண்டு கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் .மோடி பேசியதாவது:-


டெல்லி பல்கலைக்கழகம் வாழ்வின் பல அம்சங்களுக்கு பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. இது வெறும் பல்கலைக்கழகம் அல்ல . இயக்கம். இந்தியா சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும்போது இந்த பல்கலைக்கழகம் 125 - வது ஆண்டு விழாவை கொண்டாடும். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கில் முக்கிய பங்கு வகிக்கும். இந்தியாவில் பழங்காலத்தில் இருந்து நாளந்தா, தட்சசீலா பல்கலைக்கழகங்கள் மகிழ்ச்சிக்கும் செழுமைக்கும் ஆதாரங்களாக திகழ்ந்தன.


பல நூறாண்டுகளாக நிலவிய அடிமைத்தனத்தால் கல்வி மையங்கள் அழிந்துவிட்டன . இந்தியாவின் அறிவுப்பயணம் நின்று போது . அதன் வளர்ச்சியும் நின்றுவிட்டது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்ட எதிர்காலம் சார்ந்த கொள்கைகள் மற்றும் முடிவுகளால் இந்திய பல்கலைக்கழகங்களுக்கான உலகளாவிய அங்கீகாரம் அதிகரித்துள்ளது.


பா.ஜனதா அரசு பதவிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு உலக தரவரிசையில் 12 பல்கலைக்கழகங்கள் இருந்தன . ஆனால் சமீபத்திய தரவரிசை பட்டியலில் 45 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன . நாட்டில் ஐ.ஐ.டி ,     ஐ.ஐ.எம் ,என்.ஐ.டி ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு சில நூறு எண்ணிக்கையில் இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது.


சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். இந்திய இளைஞர்கள் மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்து இருப்பதால் இந்தியா மீதான உலகளாவிய மரியாதையும் கௌரவமும் உயர்ந்துள்ளது. அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் பூமியில் இருந்து விண்வெளி செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு வரை இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும் .அதனால அவர்களின் மேம்பாடு அதிகரிக்கும். மைக்ரான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்

Similar News