பல்வேறு துறைகளில் நடந்த கழிவுப் பொருள்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய் - கழிவு மேலாண்மையில் அசத்தும் மத்திய அரசு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நடந்த கழிவு பொருட்கள் விற்பனை மத்திய அரசுக்கு ரூ.254 கோடி வருவாய் கொடுத்துள்ளதாக மதிய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கடந்த இரண்டாம் தேதி முதல் வருகிற 31ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. இதில் முக்கியமாக கழிவு பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. அத்துடன் விதிமுறைகள் எளிதாக்கப்படுவதுடன் லட்சக்கணக்கான கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றதாக கருதப்படுபவை நீக்கப்படுகின்றன. இதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அந்த வகையில் 40 லட்சம் கோப்புகள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை நீக்கப்பட்டதால் 37.19 லட்சம் சதுர அடி காலியாகி உள்ளது. குறிப்பாக 68, 363 இடங்களில் நடந்த இந்த பணிகளில் 40.52 லட்சம் கோப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கழிவு பொருட்கள் விற்பனை மூலம் ரூபாய் 254.21 கோடி வருவாய் கிடைத்திருக்கின்றது. மேலும் 588 விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
இதைப்போல மூன்று 3,20,152 மக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல்களை மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் கடந்த இரண்டாம் தேதி முதல் இரண்டாம் கட்ட தூய்மை இயக்கம் நடந்து வருகிறது. டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் கள அலுவலகங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் 294 இடங்களில் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியின் போது சுமார் 850 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 322 கோப்புகள் நீக்கப்பட்டன. கழிவு பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் இதுவரை ரூபாய் 10 கோடியே 72 லட்சத்து 960 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த தூய்மைப் பணிக்கு பிறகு 75 ஆயிரத்து 145 சதுர அடி இடம் காலியாக இருக்கிறது. இந்த தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.