மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் உத்தரபிரதேசத்தில் சாலை - யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்

உத்திரபிரதேசத்தில் சாலை சந்திப்பு ஒன்றுக்கு மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவரது 93 வது பிறந்த தினத்தை ஒட்டி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

Update: 2022-09-29 05:30 GMT

புகழ்பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் மறைந்தார். அவரது புகழை போற்றும் வகையில் உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் சாலை சந்திப்பு ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சரயு நதிக்கரையில் உள்ள இந்த சந்திப்பு லதா மங்கேஷ்கர் சவுராகா என்று இனி அழைக்கப்படும். ஏழு புள்ளி ஒன்பது கோடி செலவில் அந்த சந்திப்பை மேம்படுத்திய மாநில அரசு அங்கு பிரம்மாண்ட வீணை சிலை ஒன்றையும் வைத்திருக்கிறது. 12 மீட்டர் உயரம், 40 அடி நீளம் கொண்ட இந்த சிலை 14 டன் எடை கொண்டது.


லதா மங்கேஷ்கரின் 93 வது பிறந்த தினத்தை ஒட்டி இந்த சந்திப்பை மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டியும் கலந்து கொண்டார். இது போன்ற பிரம்மாண்ட இசை கருவி நிறுவப்பட்டிருப்பது நாட்டிலேயே இது முதல் இடம் என மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் இசை ஆர்வலர்களை கவரும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்று அவர்கள் தெரிவித்தனர்.





 


Similar News