நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர் - கவர்னர் ரவி சூசகம்!

நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆன்மீகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது என கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2022-11-25 06:15 GMT

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மேல்கோட்டை ஸ்ரீயதுகிரி யதுராஜமடம் 41வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீ யதுகிரி ராஜநாராயண ராமானுஜர் ஜீயர் சாமி தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-


கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமி ஆகும்.பாரதமாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், தேவி அன்னையின் அருளாற்றல் நிறைந்த பகுதியாகவும் முக்கடல் சங்கமிக்கும் இடமாகவும் கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசத்தின் பார்வையில் வருவதற்கு முன்பு அவரது வருகை கன்னியாகுமரியில் இருந்தது. பின்னர் அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை இந்தியாவின் தர்ம மற்றும் அறத்தை உலகிற்கு சொல்லும் விதமாக அமைந்தது. எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இரு மகான்களில் ஒருவர் ராமானுஜர். மற்றொருவர் விவேகானந்தராகும் தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன். இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வர வேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள் இந்தியாவில் ஆன்மீக புரட்சியை உருவாக்கியுள்ளது.


மதத்தின் திறவுகோல்களாக ராமானுஜரும் விவேகானந்தரும் இருந்தார்கள். உலக மக்கள் அனைவரும் இவர்களது அருமை உணர்ந்துள்ளார்கள்.விவேகானந்தர் தன்னை புதிய மனிதர் என்று அறிந்த அதே இடத்தில் தான் இந்த நிகழ்வில் பங்கேற்க கூடிய வாய்ப்பு கிடைத்தது நான் செய்த பாக்கியம்.இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழ்நிலையை உருவாக்கும். இந்த உரிமைகளை பாரத நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாட்டில் தீவிரவாதத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடியாது. ஆன்மீகத்தையும் மக்களையும் பிரிக்க முடியாது. இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் தீவிரவாதம் அடிபணிந்து இருக்கும்.


நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் உள்ளது. அவர்களுக்கு கல்வி மிக முக்கியம். நமது நாட்டின் வளர்ச்சி பல நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. விஞ்ஞானம், மருத்துவம் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது நாட்டு மக்களின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் பலம். நமது நாட்டின் கலாச்சாரத்தை பல வெளிநாட்டினரும் பின்பற்றி வருகிறார்கள் அதற்கு காரணம் ஆன்மீக சிந்தனை, தர்மம் உள்ளிட்டவற்றை நாம் அடுக்கிக்கொண்டே  போகலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற்ற முதன்மை நாடாக முன்னேற்றுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை இவ்வாறு கவர்னர் பேசினார்.





 



Similar News