மன்னார்குடியில் குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுப்பு

மன்னார்குடியில் குளம் தூர்வாரும் பணியின் போது குழந்தையுடன் கூடிய பெண் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-10-06 13:00 GMT

மன்னார்குடி நகரில் உள்ள ருக்மணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு பொக்லின் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குளத்தின் வட பகுதியில் மண்ணைத் தோண்டி எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர். அம்மன் சிலை போன்று தோற்றுமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது. இதுகுறித்து மன்னார்குடி தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி பாதுகாப்பாக மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இதுபோன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் அப்பகுதியில் உள்ள பெரியோர்கள் தெரிவித்தனர்.






 


Similar News