"எல்லாரும் கலைஞர் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது" - மதுரையில் வெடித்த மு.க.அழகிரி!
"எல்லாரும் கலைஞர் ஆகிவிட முடியுமா? ஒரு நாளும் ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது" - மதுரையில் வெடித்த மு.க.அழகிரி!
கருணாநிதியின் மூத்த மகனும் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அண்ணனுமாகிய மு.க.அழகிரி தி.மு.க-வின் முன்னாள் எம்.பி-யாகவும், தென்மண்டல அமைப்பு செயலாளராகவும் கருணாநிதி காலத்தில் கெத்தாக வலம் வந்தவர். இன்னும் கூற போனால் தி.மு.க-வில் ஸ்டாலினை விட அதிக திறம் மிக்கவரும், செல்வாக்கு மிகுந்தவருமாவார். ஆனால், சில உள்ளடி வேலைகளால் "தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக" கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு சில காலம் அரசியலை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்க போவதாக இன்று தனது ஆதரவாளர்களின் கூட்டத்தை மதுரையில் கூட்டினார். அதில் சில முக்கிய விஷயங்களையும் தனது ஆதரவாளர்களுக்கான "தன் நிலைப்பாடு" பற்றியும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியதாவது, "பல நேரங்களில் பல சோதனைகள் நேரலாம், அதை கடந்து வந்திருக்கிறோம்.நான் எப்போதும் உங்களில் ஒருவன்" என தன் தொண்டர்களுக்கு உற்சாகமளித்தார்.
பின் தி.மு.க-வை பற்றி பேசிய அவர், "தி.மு.க-வை விட்டு வைகோ வெளியேறிய போது ஒரு தி.மு.க தொண்டன் கூட வெளியேறவில்லை. திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றியை இந்தியாவே உற்று நோக்கியது, திருமங்கலம் இடைத்தேர்தலில் முதலில் பணி செய்ய விரும்பவில்லை, கலைஞர் வலியுறுத்தியதால் தேர்தல் பணி செய்தேன். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா என்கிறார்கள், ஆனால் அப்படி ஒரு ஃபார்முலா கிடையாது" என்றார்.
மேலும் பேசிய அவர், "திருச்செந்தூர் தொகுதியிலும் கொடுத்த வாக்குறுதியை போலவே வெற்றி பெற்று காட்டினேன். தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை வற்புறுத்தி கொடுத்ததால் ஏற்றுக்கொண்டேன். மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்று கூறினேன், கலைஞர்தான் வலுக்கட்டாயமாக கொடுத்தார்" என பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும், "திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்காமல் இருந்திருந்தால் அப்போது தி.மு.க-வின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கும்" என்ற உண்மையை கூறினார்.