ராமாயண காலத்து மூலிகை - இமயமலை சிகரத்தின் குன்றுகளில் கண்டுபிடிப்பு

ராமாயண காலத்தில் சஞ்சீவினி மூலிகையை போன்ற ஒரு புதிய மூலிகை கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-07 05:45 GMT

இமயமலை சிகரத்தின் குன்றுகளில் வளரும் ஒரு மூலிகை செடி உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புராண கதைகளில் கூறப்படும் சஞ்சீவினியை போன்றதொரு மூலிகை இது. அத்துடன் மலைப்பகுதியில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ப உடலை தகவமைத்துக் கொள்ளவும் கதிரியக்க பாதிப்பை தடுக்கவும், இந்த மூலிகை உணவு உதவுவதாக தெரியவந்துள்ளது. ராமாயணத்தில் லட்சுமணனை காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த சஞ்சீவினி மூலிகை இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் ரோடியோலா மூலிகை செடிதான் ராமாயணத்தில் சஞ்சீவினி என்று குறிப்பிடப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லடாக் பகுதி மக்களிடையே இந்த மூலிகைக்கு 'சோலோ' என்று பெயர். இதன் நற்பண்புகள் பற்றி அங்குள்ளவர்களுக்கே பெரிதாக தெரியவில்லை. அதே நேரம் இந்த செடியின் இலையை கீரை போல சமைத்து இப்பகுதி மக்கள்  உண்கின்றனர். லே பகுதியைச் சேர்ந்த உயர்மலை பகுதி ராணுவ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள். "உயிர்வேதி  ஆயுத யுத்தத்தில் வெளியாகும் காமா கதிர்கள் உடலில் ஊறு ஏற்படுத்தாதவாறு இம்மூலிகையால் தடுக்க முடியும்" என்கிறார் ராணுவ ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஆர்பி ஸ்ரீ வாஸ்தவா.


லேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினரும் இந்த அதிசய மூலிகை குறித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். "குறைந்த காற்றழுத்தம், ஆக்ஸிஜன் குறைவு ஆகியவற்றால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவிகரமாக இருக்கும். அத்துடன் மூலிகைக்கு மன அழுத்தத்தை குணப்படுத்தும், பசியை தூண்டும் அம்சமும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் ஸ்ரீவாஸ்தவா.





 


Similar News