கள்ளச்சாராய மாநிலம் ஆகும் தமிழகம்.. மௌனத்தை பதிலாக வைத்துள்ளதா தி.மு.க?

Update: 2023-06-06 03:07 GMT

கடந்த ஆட்சி காலங்களில் இல்லாத அளவில் கள்ளச்சாராய மரணம் இந்த ஆட்சியில் அதிக அளவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. ஆங்காங்கே பலர் கள்ளச்சாராயத்தை சர்வ சாதாரணமாக காய்ச்சி விற்பனை செய்து வருகிறார்கள். இது பற்றி கடந்த சில மாதங்களாகவே கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பிக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் தற்போது வரை தமிழக அரசு இந்த ஒரு பிரச்சனைக்கு மௌனத்தை தன்னுடைய பதிலாக வைத்து இருக்கிறது. 


மே 16, 2023 அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இது போன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்துள்ளனர். மேலும், செங்கல்பட்டில் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் சம்பவத்தில் 40 பேர் ஒண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கள்ளச் சாராய சம்பவங்களைப் பொறுத்தவரையில், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகத்தான் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனவும், இதன் காரணமாகவும் அரசு உதவித் தொகையை அதிகரித்து வழங்கி இருக்கலாம் எனவும், மற்ற மரணங்களை காட்டிலும் கள்ளச்சாராயம் சாப்பிட்டு மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்காக 10 லட்சம் திமுக அறிவித்து இருப்பது நிர்வாகத் தோல்வியை எடுத்துக்காட்டு இருக்கிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.


இப்படி பல்வேறு கள்ளச்சாராய மரண சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து இருக்கிறது. இத்தகைய சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க தமிழக போலீசார் தற்போது அதிகமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வருவதை கண்டுபிடித்து வருகிறார்கள். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பேரணாம்பட்டு அருகிலிருக்கும் சாத்கர் மலைக்குள் வற்றாத நீரோடைகளும், சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன.

இதனால், சட்டவிரோத மாஃபியா கும்பல்கள் சாத்கர் மலைப் பகுதியை ஆக்கிரமித்து, சாராய அடுப்புகளைப் பற்ற வைத்திருக்கின்றன. நீண்டகாலமாக இவர்கள் இங்கு கள்ளச்சாராயத்தை சட்ட விரோதமாக காய்ச்சி வருகிறார்கள்.


மலைக்குள் ஒளிந்திருக்கும் இவர்களைப் பிடிப்பதற்காக "டிரோன்" கேமராவையும் பறக்கவிட்டு சாராய அடுப்புகளையும், ஊறல் வடிக்கும் பேரல்களையும் கண்டுபிடித்து போலீசார் அழித்தனர். சுமார் பத்தாயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளையும் தீயிட்டு எரித்தனர். அதை போல் மற்றொரு சம்பவம் ஆன செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த ஓதியூர் மற்றும் நயினார்குப்பம் கிராமப் பகுதிகளில், 210 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.


15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது கள்ளச்சாராயம் பல்கி பெருக்கி வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி இருக்கிறது. திமுக ஆட்சியில் இப்படி கள்ளச்சாராயம் பெருகி வருவது நாட்டில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது? இதுபோன்ற கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்ந்து நிகழுமா? என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான கேள்வியை கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இதற்கு திமுக தரப்பில் எந்த ஒரு பதிலும் கூறாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூட, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய குடும்பம் மகிழ்ச்சியாகவே இல்லை. தன்னுடைய தந்தையின் மதுப்பழக்கம் காரணமாக நாங்கள் இப்படி இருக்கிறோம். எனவே எனது தந்தை மது பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இந்த விவகாரம் கடும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து ஆளும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றன. மக்களும் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி திமுக அரசு கள்ளச்சாராயம் மற்றும் சாராயம் இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையை விரைவில் தொடங்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News